வெள்ளி, 16 நவம்பர், 2012

திருஅரங்கர் தத்தைவிடு தூது 2

Untitled-11

3. நம்மாழ்வார் துதி.

விடையனங்கை யிரவமல விழியருளால் அறருளும்
                                       விமலன் வெள்வேற்
படையனங்கை யிரவமலர் பார்வைநடை வாய்ப்பதுமப்
                                        பாவை கேள்வன்
அடையனங்கை யிரவமல னகற்றரங்கன் அடியிணைமே
                                         லறையும் பாடற்(கு)
உடையநங்கை யிரவமல முறவுயிர்க்கும் தனிக்கதிர்எற்(கு)
                                          உதவும் மாதோ

விடையன் – இடப வாகனச் சிவன், அங்கை இரவ – கையிலேற்கும் பிச்சைத் தொழிலை, அமலவிழி அருளால் –குற்றமற்ற  கண்ணருளால்,  அற- நீங்குமாறு, அருளும் –அனுக்கிரகிக்கும், விமலன் – இறைவன், வெள்வேல் படை – ஒளி செய் வேல் ஆயுதம், அனம் – அனப் பறவை, கையிரவமலர் – ஆம்பல் மலர், (முறையே), பார்வை நடை வாய் – விழி நடை வாய், பதுமப்பாவை – தாமரைச் செல்வி (திருமகள்)யின், கேள்வன் – கணவன், அடையனங்கு – மன்மதனால் அடையும், அயிர் – ஐயம், அவம் – துன்பம், மலன் – பாவங்கள், அகற்று – நீக்கும், அரங்கன் – ஸ்ரீரங்கநாதன், அடியிணை மேல் – திருவடிகளின் மீது, அறையும் – சொல்லும், பாடற்கு – பாடலாம் தத்தை விடு தூதுக்கு, உடைய நங்கை – காரி மாறன் மனைவி, இரவு – பிறவி இருள், அமலம் உற – மாசற்ற தன்மை உற, உயிர்க்கும் – ஜனித்த, தனிக் கதிர் – ஒப்பற்ற சோதி, எற்கு – எளியேனுக்கு, உதவும்—உதவி புரியும், மாதோ – அசை.

4. குரு வீரராகவர் துதி.

மானவ னத்தத்தை யாயுதம் ஏந்திய மாயப்பிரான்
தீனவ னத்தத்தை மாற்றரங் கேசன் திருவடிமேற்
கானவ னத்தத்தை சொற்றரு தூதுக்குக் காப்புரைக்கில்
வானவ னத்தத்தை மாசிவந் தான்கழல் மாமலரே.

மானவன் – பெருமைக்கு உரியவன், அத்தத்து – கரத்தில், ஐ ஆயுதம் ஏந்திய – பஞ்சாயுதங்கள் தரித்த, (அழகிய சக்கரம் ஏந்திய எனலும் ஆம்) மாயப் பிரான் – திருமால், தீனவன் – கஜேந்திரனாம் எளியவன், அத்தத்தை – துன்பத்தை, மாற்று – நீக்க, அரங்கேசன் –திருவரங்கநாத இறைவன், திருவடி மேல் – சரணங்களில், கானவன் – இசை சேர் பொழிலில் உள்ள, அத்தத்தை – அக்கினி, சொல் தரு – உரையாகப் பாடும், தூதுக்கு – தூது ப்ரபந்தத்துக்கு, உரைக்கில் –கூறில், வானவன் – சூரியன், தத்து – விரும்பும், அத்தை—அந்த மகர மாதத்தில், மாசி வந்தான் – மக நட்சத்திரத்தில் உதித்தவன், கழல் – திருவடிகளாம், மாமலரே – தாமரை மலர்களே, காப்பு – இரட்சையாகும். (நூலாசிரியரின் குரு கோடி கன்னிகாதானம் வீரராகவ சுவாமி தை மாதம் மக நாளில் தோன்றியவர் போலும்)

                                                          தொடரும்…..,,,

வியாழன், 15 நவம்பர், 2012

திருஅரங்கர் தத்தைவிடு தூது

ஹம்சத்தைத் தூது விட்டார் ஸ்வாமி தேசிகன். மேகத்தைத் தூது விட்டான் கவி காளிதாஸன். நம் மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்காரோ (ஏற்கனவே லக்ஷத்துக்கும் அதிகமான கவிதைகள் இயற்றிய இவரைப் பற்றிப் பலமுறை இங்கே எழுதியிருக்கிறேன். ) திருஅரங்கனுக்கு கிளியைத் தூது அனுப்பியிருக்கிறார். தமிழறிந்த பலரும் இதை முன்பே படித்து ரசித்திருக்கலாம். இன்றுதான் இந்நூலைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. காப்புரிமை இருக்கிறது. என்றாலும் நல்ல தமிழை, அரங்கனிடம் ஈடுபாட்டால் இன்னமுதாய்ப் பொங்கிவந்திருக்கும் ஒரு அருமையான நூலை அனைவரும் படித்து மகிழவேண்டும் என்ற ஆசையால் காப்புரிமையை மீறத் துணிந்திருக்கிறேன். இங்கு படிப்பவரில் ஒரு சிலராவது காப்புரிமை வைத்திருக்கும் திரு கோவிந்தராஜனை (எண்8, நர சிம்மபுரம்,மைலாப்பூர், சென்னை) அணுகி நூலை வாங்கிப் படிக்க இது ஒரு தூண்டுதலாக அமைந்தால் மிக மகிழ்வேன். வழக்கமாக மதுரகவி நூல்களுக்குச் சிறு குறிப்புகள் வழங்கி உதவும் திரு. ‘கம்பன்’ இந்நூலுக்கும் எழுதியுள்ள குறிப்புகளுடன் இனி நூலைப் படித்து ரசியுங்கள். வழக்கம்போல், தினம் கொஞ்சம்.  

மதுரகவி
திருஅரங்கர் தத்தைவிடு தூது.

காப்பு

1.மாருதி துதி

சீர்மருவுந் தென்னரங்கர் சேவடிமேற் செந்தமிழால்
தார்மருவும் வாசிகையான் சாற்றுதற்கு – நீர்மருவும்
அஞ்சத்தான் எண்புயத்தான் ஆகத்தான் வந்தருளுங்
கஞ்சத்தார் மாருதிதாள் காப்பு.

சீர்மருவும் தென்அரங்கர் – சிறப்பு அமைந்த அழகிய அரங்கநாதப் பெருமாளின், சேவடிமேல் – சரணங்களில், செந்தமிழால் – செவ்விய தமிழ் மொழியால், தார் மருவும் –மலர்கள் பொருந்திய, வாசிகை – மாலை, யான் சாற்றுதற்கு – நான் உரைப்பதற்கு, நீர் மருவும் – நீரில் பொருந்திய, அஞ்சத்தான் – அன்னவாகனன் பிரமன், எண்புயத்தான் – சிவபெருமான், ஆகத்தான் – ஆகும்படிதானே, வந்து –தோன்றி, அருளும் – அனுக்கிரகிக்கும், கஞ்சத்தார் – தாமரை மலர்கள் பொருந்திய, மாருதி தாள் – அனுமன் திருவடிகள், காப்பு – சரணம்.

2. எதிராசர் துதி

செல்லியலுஞ் சோலை திருவரங்க நாதனுக்குச்
சொல்லியதோர் தத்தைவிடு தூதுக்கு – நல்அரணாம்
வாதூர் புறஇருட்கு மன்னுகதி ராகிவரும்
பூதூர் முனிஇருதாட் போது.

செல் இயலும் – மேகம் தவழும், சோலை – பொழில்களை உடைய, திருவரங்க நாதனுக்கு – ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு, சொல்லிய – கூறிய, ஓர் தத்தை விடு தூதுக்கு – ஒரு கிளி விடு தூது என்னும் சிற்றிலக்கியத்துக்கு, வாது ஊர் புற இருட்கும் – வாதம் தவழும் புறச்சமயமாம் இருளுக்கும், மன்னு – விளங்கும், கதிராகி, சூரியனாகி, வரும் – ஒளி செய்து வரும், பூதூர் முனி – எதிராசர், இருதாள்போது – இரு மலர்ச் சரணங்கள், நல் அரணாம் – நல்ல காப்பாகும்.

திங்கள், 12 நவம்பர், 2012

Guru Paramparai Vaibhavam dated 12-11-2012

இரண்டு வருடங்களாக நடந்து வந்த குரு பரம்பரை வைபவ உபந்யாஸங்களின் ஸாராம்சத்தை ஒரு மணி நேரத்தில் கொடுக்க முடியுமா? முடியும் என்று மிக அற்புதமாக நாட்டேரி ஸ்வாமி காண்பிக்கிறார். இந்த தொடர் உபந்யாஸத்தின் கடைசி பகுதியான ப்ரக்ருதம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமதாண்டவன் வைபவத்தைச் சொல்வதற்குமுன் இதுவரை கேட்காதவர்களும் ஓரளவு நம் ஆசார்ய பரம்பரையின் மேன்மையைப் புரிந்துகொள்ளும் வகையில் தானும் அநுபவித்து சொல்லி  நம்மையும் அநுபவிக்க வைத்த தனது உபந்யாஸங்களை மிக அழகாகச் சுருக்கி நாட்டேரி ஸ்வாமி இந்த வாரம் உபந்யஸிப்பதைக் கேட்டு மகிழ

http://www.mediafire.com/?0dyz7xocpuf5w3p